சிவகிரியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டி கொலை
1 min read
Man on bail in Sivagiri murder case hacked to death
13/3/2023
சிவகிரியில் பழிக்கு பழியாக கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கு
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் காமராஜர் காலனி தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் செல்வகுமார் (வயது 45). இவர் கடந்த ஆண்டு சிவக்குமார் என்பவரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வகுமார் கடந்த 11ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றுறு (13ம் தேதி) செல்வக்குமாரை தேவிபட்டணம் சமுத்திரம் மகன் சக்திவேல் (35) என்பவர் பைக்கில் சிவகிரி கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பைக் சிவகிரி அரசு மருத்துவமனை அருகே சென்ற போது பைக்கை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது.
வெட்டிக்கொலை
அக்கும்பலை பார்த்ததும் செல்வக்குமார் அங்கிருந்து தப்பி வயல் பகுதியில் ஓடியுள்ளார். அக்கும்பல் ஓட ஓட விரட்டி செல்வக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த செல்வக்குமார் சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். செல்வக்குமார் இறந்ததை உறுதி படுத்திக் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சிவக்குமாரின் நண்பர்கள்தான் பழிக்கு பழியாக செல்வக்குமாரை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோக்குமார், சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொ) ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சஜூன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். செல்வக்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரல் ரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கொலை செய்தவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
பழிக்குப் பழியாக செல்வக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகிரி பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சிவகிரி மற்றும் தேவிபட்டணம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.