“ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” – மத்திய அரசு தகவல்
1 min read
“Museum to be set up at Adichanallur soon” – Central Govt
13.3.2023
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் மிக குறுகியகாலத்தில் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆதிச்சநல்லூர்
“ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்” அமைக்கும் பணியின் நிலை குறித்தும், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களில் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் தமிழகத்தின் கீழடியில் அமைக்க மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த மத்திய கலாச்சாரத் துறை மந்திரி கிஷன் ரெட்டி, தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணிகள் மிக வேகமாக முடிக்கக்கூடிய வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, விலைமதிப்பற்ற கல்வெட்டுகளை ஒரே தளத்தின் மூலம் தெரிந்து கொள்வதற்காக டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை கட்ட சிறந்த கட்டடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம் என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வ பதில் தெரிவித்துள்ளார்.