“பகல் 12 முதல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்” என்று தமிழக அரசு எச்சரிக்கை
1 min read
Tamil Nadu government warns that “Do not go out between 12 noon and 3 am”.
15/3/2023
தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியீட்டுள்ளது. அதன்படி பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்ப அலை
தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியீட்டுள்ளது. இதை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அனுப்பி உள்ளது. வழிகாட்டுதலின் முக்கிய அம்சங்கள்:-
வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த செயல் திட்டங்கள் மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும்.
வெப்பத்தால் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவற்றை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதீத வெப்பத்தால் சிகிச்சை பெறுபவர்களின் பட்டியல் ஒவ்வொரு மருத்துவமனையிலும் பராமரிக்க வேண்டும்.
அனைத்து மருத்துவ அலுவலர்களும் வெப்ப பாதிப்புகளை கண்டறிவதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அதீத வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஓஆர்எஸ் பாக்கெட்டுகள், ஐஸ் பேக்குகள் போன்ற அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு கையிருப்பு வைக்க வேண்டும்.
தேவைக்கு அதிகமாக குடிநீர்,குளிரூட்டும் கருவிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஐஸ் பாக்கெட்டுகளை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
குளிரூட்டும் கருவிகள் மற்றும் இதர சாதனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வீட்டில்…
பொதுமக்கள் அதிக நீர் அருந்த வேண்டும். முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும்.
பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை சூரிய வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
சூடு, தோலில் எரிச்சல், ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.