தொடர் அமளியால் 4-வது நாளாக முடங்கியது பாராளுமன்றம் முடங்கியது
1 min read
Parliament was paralyzed for the 4th day due to continuous monsoon
16/3/2023
எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பிக்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடர்
டெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில் ராகுல்காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதேவேளை, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. குறிப்பாக, நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணியாக சென்றனர்.
4-வது நாளாக…
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. மக்களவையும், மாநிலங்களவையும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அவை நடவடிக்கை தொடங்கிய உடனேயே அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
அதேவேளை, லண்டனில் ராகுல்காந்தியின் பேச்சு குறித்தும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளும் கட்சி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியிம் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு இரு அவைகளும் கூடிய நிலையில் சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன.
இரு அவைகளிலும் மீண்டும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவை நாளைறு காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என தெரிவிக்கப்பட்டது.
பணிகள் முடக்கம்
எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்.பிக்களின் அமளியால் 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எவ்வித அவை நடவடிக்கைகளும் நடைபெறாமல் அலுவல் பணிகள் முடங்கியுள்ளன. அதானி குழும விவகாரம், ராகுல்காந்தி பேச்சு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்களின் அமளியால் 4-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் செயல்படாமல் முடங்கின.