சிறந்த இதழியலாளருக்கு வழங்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
1 min read
Apply for the Artist Pen Award given to the best journalist
8.4.2023
சிறந்த இதழியலாளருக்கு வழங்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் விருது
ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்த தின மான ஜூன் 3-ந்தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 2022-ம் ஆண்டுக்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும். கலைஞர் எழுது கோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு:-
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றவராகவும் இருக்க வேண்டும்.
பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத் திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்.
தாக்கம்
விண்ணப்பதாரரின் எழுத்துக்கள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை 600009 என்ற முகவரிக்கு 30-ந் தேதிக்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.