இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 9,111 பேருக்கு கொரோனா
1 min read
9,111 new cases of corona in India in one day
17.4.2023
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 9,111 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60,313 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,111 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60,313 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த புதன் கிழமை 10,158 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை,11,109 பேர் பாதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 10,753 ஆகவும், சனிக்கிழமை 10,093 ஆகவும் பதிவாகி இருந்தன. இந்நிலையில் அன்றாட பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 35 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் குஜராத்தில் 6 பேர், உத்தரப் பிரதேசத்தில் 4 பேர், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் தலா 3 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர், பிஹார், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 1 என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.