பணியில் இருந்து விலகுவது எப்போது- கவர்னர் ஆர்.என் ரவி அதிரடி பதில்
1 min read
When to resign – Governor RN Ravi action response
18.4.2023
நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் என் பணியில் இருந்து விலகிவிடுவேன் என தமிழக கவர்னர் ஆர்.என் ரவி மாணவர்களிடையே பேசினார்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று காலை வந்தார். ராமநாதபுரம் விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன்பின் அங்கிருந்து சாலை வழியாக மண்டபம் அருகே மரைக்காயர் பட்டினம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்தார். அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு கவர்னர் ரவி பதிலளித்தார். மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கவர்னர், நான் வகிக்கும் பதவியில் எப்போது எனக்கு சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது பணியை முடித்து கொள்வேன் என்றார். பள்ளி மாணவர்கள் தூக்கத்தை குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டாம். அதே நேரத்தில் மாணவர்கள் போதிய நேரம் தூங்க வேண்டும் என்றார்.
தனது இலக்கை நோக்கி முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு வரும் இடர்பாடுகளை ஒருபோதும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்வில் நிச்சயம் முன்னேறலாம். நம் நாட்டில் விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம் என்றார்.
மாணவர்கள் தங்கள் மனதை ஒருமுகப்படுத்த தினமும் யோகாசனம் செய்ய வேண்டும் என்றார். உழைப்பால் உயர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஆன டாக்டர் அப்துல் கலாம் போல், மாணவர்களாகிய நீங்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
இமானுவேல் சேகரன்
பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று (19 ம்தேதி) மாலை 3.45 மணிக்கு பரமக்குடி உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருகை தருகிறார். அங்கு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு கமுதி பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு ஆளுநர் ரவி வருகை தந்து அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்பு மாலை 6.15 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி, பரமக்குடி மற்றும் கமுதி பசும்பொன் கிராமத்திற்கு இன்று வருகை தருவதை முன்னிட்டு காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ரவி பரமக்குடி வருகை தருவதை முன்னிட்டு பரமக்குடி வட்டாட்சியர் அலுவகத்தில் வட்டாட்சியர் ரவி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.கூட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்.கம்யூ,ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-குணாளன்,பரமக்குடி