சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம்
1 min read
Automatic Liquor Vending Machine in Chennai
28/4/2023
சென்னையில் டாஸ்மாக் நிறுவனம் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை தொடங்கி உள்ளது.
மதுபானம்
தமிழகத்தில் 5329 மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 500 மதுபானக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 500 கடைகளை குறைப்பதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கியுள்ளது. 50 மீட்டர் இடைவெளியில் இருக்கும் கடைகள், வருவாய் குறைந்த கடைகள், பள்ளி, கோயில்கள் அருகில் மக்களால் அகற்றப்பட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடைகள் கண்டறியும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், முதல் முறையாக தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி உள்ளது. கோயம்பேடு வி.ஆர். வணிக வளாகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, அதற்கான தொகையை செலுத்தினால், தானியங்கி முறையில் இயந்திரத்தில் இருந்து மதுபானத்தை பெற்றுக் கொள்ளலாம்.
4 எலைட் மதுபான கடைகளில்…. மேலும், மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னையில், சோதனை அடிப்படையில் உள்ள 4 எலைட் மதுபானக் கடைகளில் பணம் செலுத்தினால் மதுபானம் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.