June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தோரணமலை முருகன் கோவிலில் சிறுவர், சிறுமியர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள்

1 min read

Thoranamalai Murugan Temple Traditional games for boys and girls

8/5/2023
தோரணமலை முருகன் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி
சிறுவர், சிறுமியர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.

தோரணமலை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தோரணமலை முருகன் கோவில் உள்ளது. அகத்தியர் வாசம் செய்த இத்தலத்தில் அவரது சீடர் தேரையர் ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.
இக்கோவிலில் தமிழ்மாதம் கடைசி வெள்ளி, பவுர்ணமி கிரிவலம், கிருத்திகை பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தைப்பூசம், தமிழ்புத்தாண்டு, வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் விழா கொண்டாடப்படும்.

கோடை கொண்டாட்டம்

தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியை(பணி நிறைவு) கயற்கண்ணி தலைமை தாங்கினார். அவர் கிராமிய விளையாட்டுக்களின் பெருமையை எடுத்து கூறி அதை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.
முதலில் கராத்தை மாஸ்டர் வேல்முருகன் அவர்களிடம் பயிற்சி எடுத்த மாணவ_மாணவிகளின் சாகச நிகழ்சிகள் நடந்தன. மோட்டார் சைக்கிள் மற்றும் கார் தங்கள் கை விரல்கள் மீது ஏறும் வலிமையான சாகசத்தை சிறுவர் சிறுமிகள் செய்து
பிரமிக்க வைத்தனர்.
அதன்பின் பம்மர விளையாட்டு, கோலி விளையாட்டு, சில்லாங்குச்சி ஆகியவை நடந்தன. இந்த விளையாட்டுகளில் உள்ள பல்வேறு பிரிவுகள் பற்றியும் அந்த விளையாட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கடையம் பாலன், கவியரசன் ஆகியோர் எடுத்து கூறினார்கள். குழந்தைகளை உற்சாகப்படுத்தும் பலூன் உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த விளையாட்டின் போது பெரியவர்கள் பலர் தங்களையும் மறந்து குழந்தைகளோடு விளையாடினார்கள். அப்போது அவர்கள் தங்கள் இளமைகால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் அந்த கால சிறுவர்கள் விரும்பி தின்னும் மிட்டாய்கள், பண்டங்கள், பிஸ்கட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.
இதில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர் அனைவருக்கும் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அவற்றை பணிநிறைவு பெற்ற ஆசிரியை பால்தாய் வழங்கினார்.
இந்த விளையாட்டுகள் அனைத்துக்குமான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார். அவர் கூறும்போது கோடை விடுமுறை காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதேபோல் கிராமிய மணம் கமழும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறினார். கல்லூரி மாணவர்கள் மாணவிகள் இல்லத்தரசிகள் என தனித்தனியாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
அப்போது லோட்டஸ் முருகன், அழகர், ஜீவா ஆகியோர் உடன் இருந்தனர்.
வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையில் பக்தர்கள் அனைவருக்கும் நிற்றுண்டி வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.