மனு நீதி நாள் முகாம் ரூ38.88 லட்சம் உதவிகள்- தென்காசி ஆட்சித்தலைவர் வழங்கினார்
1 min read
Manu Justice Day Camp Rs 38.88 Lakh Aids – Governor of Tenkasi provided
10/5/2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பெரிய பிள்ளை வலசை பகுதியில் கணக்கப்பிள்ளை வலசை மற்றும் பெரிய பிள்ளை வலசை ஊராட்சி பகுதிகளுக்கான மனுநீதி நாள் முகம் நடைபெற்றது.
இந்த முகாமில் 90 பயனாளிகளுக்கு ரூ.38.88 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரைஇரவிசந்திரன் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பெரியபிள்ளை வலசை சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிசந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. சமுதாய நலகூட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர்துரைஇரவிசந்திரன் மரக்கன்றினை நட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் பொறியாளர் க. இ. வேலுச்சாமி அனைவரையும் வரவேற்றார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிசந்திரன் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனில் அக்கறை கொண்டு அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் ,இசேவை மையங்களின் மூலம் சான்றிதழ்கள் வழங்கும் வசதி, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தென்காசி மாவட்டத்தில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 45,000 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வு ஊதியமும், 92 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.77.28 இலட்சம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4,948 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.87 கோடி மதிப்பில் பராமரிப்பு நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
விவசாய பெருமக்கள் பயனடையும் வகையில் மானிய விலையில் இடுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மக்களை தேடி அரசு என்ற அடிப்படையில் அலுவலர்கள் பொது மக்களை தேடிச் சென்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றிக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்துவதற்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கன மீட்டர் அளவும் கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் உரிய படிவத்தில் விண்ணப் பிக்கலாம் என தெரிவித்தார்.
இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17 பயனாளிகளுக்கு ரூ.44,500 மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகையும் உட்பிரிவு மற்றும் நத்தம் பட்டா 14 பயனாளிகளுக்கு ரூ. 16 இலட்சத்து 40 ஆயிரத்து 200 மதிப்பில் உட்பிரிவு பட்டா மற்றும் நத்தம் பட்டாக்களும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 27,000 மதிப்பில் இரண்டு சக்கர வாகனங்களும் 2 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 11,200 மதிப்பில் வீரிய ஒட்டு ரக காய்கறிகள் மற்றும் இடுபொருட்களும். தாட்கோ சார்பில் 7 பயனாளிகளுக்கு ஜெராக்ஸ் கடை மற்றும் டிராக்டர்களுக்கு மானியத் தொகையுடன் ரூ.14 இலட்சத்து 99 ஆயிரத்து 700 மதிப்பிலும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 768 மதிப்பில் உளுந்து விதைகளும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 16,950 மதிப்பில் தையல் இயந்திரங்களும், 43 பயனாளிகளுக்கு ரூ.6,48,000 மதிப்பில் மாதாந்திர உதவித் தொகையும் ஆக மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ.38.88 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்.
முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி ,மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் செ.சங்கரநாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரோஷன் பேகம், உதவி ஆணையர்(கலால்) இராஜ மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் .சுதா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, வேளாண்மை இணை இயக்குநர் .தமிழ்மலர், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார். கால்நடை உதவி மருத்துவர் ப.சசிகுமார் மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.மதிவதனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஸ், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) மா. மாணிக்க வாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செ.குழந்தை மணி, கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி செயலாளர் கே.வேம்பையா, பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்ற செயலாளர் கே.செல்லப்பா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.