குற்றாலம் அருவிப்பகுதிகளில் ரூ.11 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்
1 min read
Development works at the cost of Rs.11 crores in the Kurtalam waterfalls
12.5.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிப்பகுதிகளை மேம்படுத்த ரூ.11.00 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டமாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக நடைபெற்ற பூமி பூஜையில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் அனைத்து அருவி பகுதிகளையும் மேம்படுத்த 2022- 2023 ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, மற்றும் புலி அருவி ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. தற்போது பிரதான அருவிப் பகுதிகளில் பணிகள் துவக்கப்பட உள்ளது.அப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, தோரணவாயில் புதுப்பித்தல், பாதை சீரமைத்தல், சிறுவர் பூங்கா மேம்பாடு மற்றும் குற்றாலம் பேரூராட்சி ஆலோசனையுடன் அடிப்படை தேவை பூர்த்தி செய்தல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பயன் பெறுவார்கள் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், சுற்றுலா அலுவலர் சீதாராமன், மண்டல சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர் டாக்டர் கார்த்திக் குமார் தலைமை செயல் அதிகாரி திருமலை நம்பிராஜன்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா. ராமசுப்பிர மணியன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திரகுமார், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷமா, குற்றாலம் பேரூராட்சி சுகாதார அலுவலர் ராஜகணபதி, பொறியாளர் மைதீன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-முத்துசாமி, நிருபர், தென்காசி