குற்றாலம் அருகே10ஆயிரம் லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது
1 min read
Superintendent of drinking water drainage board arrested for taking 10 thousand bribe near Courtalam
17.5.2023
.தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப் பாளரை ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் ராமசுப்பிரமணியன்.இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த பணியாளராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணி நிரந்தரம் பெற்று குற்றாலம் குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய போது இவருக்கு வழங்க வேண்டிய அரியர் தொகையான ரூ.3 லட்சத்து, 93 ஆயிரத்து 700 ரூபாயை வழங்குவதற்காக, குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் (வயது 50) என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.அதற்கு, ராமசுப்பிரமணியன் தன்னிடம் பணம் இல்லை எனவும், தன்னுடைய குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது. ஆகையால் தனக்கு சேரவேண்டிய தொகையை மீட்டு தந்தால் பெரும் உதவியாக இருக்கும் என சீனிவாசனிடம் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுத்தால் மட்டுமே உன் பணம் உனக்கு கிடைக்கும் என அதிகாரமாக பல நாட்களாக கூறி வந்துள்ளார்..
இதுகுறித்து ராமசுப்பிரமணியன், தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தெய்வக்கண் ராஜா, ஏட்டுகள் பிரபு, வேணுகோபால், கணேசன் ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் குற்றாலம் அலுவலகத்தில் மறைந்து நின்றனர்.
அப்போது ராமசுப்பிரமணியன் லஞ்ச பணமாக ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை சீனிவாசனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சீனிவாசனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அலுவலகம் மற்றும் அவருடைய வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கே, அவருக்கு சொந்தமான பணத்தை கொடுப்பதற்காக உயர் அதிகாரி லஞ்சம் கேட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்போலவே பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.