June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்போர் மீது குண்டர் சட்டம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 min read

Thug Act against bootlegger, drug dealers: Order of M.K.Stal

17.5.2023
கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்போர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஆய்வுக்கூட்டம்

கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், மதுவிலக்கு தொடர்பான கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச் சாராய இறப்புகள் குறித்தும், தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில், காவல் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை (மே 17) நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, தமிழக முதல்வர், மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்பாட்டில் உள்ளதை, மக்களிடையே பிரபலப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆகியோரின் வாட்ஸ்அப் எண்களை அறிவித்து, அதன்மூலம் பெறப்படும் புகார்களை கூடுதல் காவல் துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கம்) கண்காணித்து உடனுக்குடன் எடுக்கும் தொடர் நடவடிக்கையை உறுதி செய்திட வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று உள்துறைச் செயலாளரின் மூலம் முதல்வரின் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கள்கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு நடத்திட வேண்டும். இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கிட வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். இதனை பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிரைக் கொண்டு நடத்திட வேண்டுமென்றும்; தொழிற்சாலைகளில். எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணித்து, அது விஷச் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை, காவல் துறை மற்றும் உதவி ஆணையர் (கலால்) கண்காணித்திட வேண்டுமென்றும், அதோடு, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில், மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் உயரதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அரசின் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், இதனை உள்துறைச் செயலாளர் கண்காணித்திட வேண்டுமென்றும் ஆணையிட்டுள்ளார்.

அதோடு, கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு மாதமும், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநரின் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்களின் மாதாந்திரக் கூட்டம் நடத்தப்பட்டு, காவல் துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, முதல்வர் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறை அலுவலர்கள், தங்களது முழு திறமையையும், நீண்ட அனுபவத்தையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பினை பெறும்வகையில் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு) கி. சங்கர், மதுவிலக்கு அமலாக்கத் துறை கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் மா.மதிவாணன், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநர் லெ. சுப்பிரமணியன், உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.