ரூ.2,000 நோட்டுகளை பஸ், பெட்ரோல் பங்க் களில் மாற்றலாம்
1 min read
Passengers can exchange Rs 2,000 notes in buses – Transport Department Notification
22.5.2023
ரூ.2,000 நோட்டுகளை பஸ்களில் பயணிகள் மாற்றலாம் என்று தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
2000 ரூபாய்
செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருந்த நிலையில், அரசு பஸ்களில் பயணிகள் தரும் ரூ 2,000 நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பயணிகள் தவிர வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள் ரூ 2,000 நோட்டுகளை மாற்ற அனுமதியில்லை என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
பெட்ரோல் பங்க்
அதேபோல், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் பெட்ரோல் பங்குகளில் சில்லறை தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருக்க வங்கிகள் தடையின்றி 2000 ரூபாய் நோட்டிற்கான தகுந்த சில்லறைகளை வழங்கி உதவிட வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.