சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பதவியேற்றார்
1 min read
Ganga Poorwala sworn in as Chief Justice of Chennai High Court
28.5.2023
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பதவியேற்றுக் கொண்டார். இவர் அடுத்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை நீதிபதி
மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த மாதம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அதை ஏற்று மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டின் 33வது தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், ரகுபதி, தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி கங்கா பூர்வாலா ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.