ஈரோட்டில் டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை
1 min read
Enforcers raid the house of Tasmac vehicle contractor in Erode
13.6.2023 –
ஈரோட்டில் டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.
சோதனை
ஈரோடு திண்டல் அருகே சக்தி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு லாரி மூலம் மதுபானங்களை கொண்டு செல்லும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதத்தில் சச்சிதானந்தம் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வருமானத்துறையினர் சச்சிதானத்தை வங்கிக்கு அழைத்துச் சென்று அவரது லாக்கர், பணம் இருப்பு ஆகியவற்றை குறித்தும் சோதனை செய்தனர்.
4 நாட்களாக நடந்த இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் இன்று பெங்களூரில் இருந்து வந்த அமலாக்கத்துறையை சேர்ந்த 2 அதிகாரிகள் இன்று காலை 10 மணி அளவில் திண்டலில் உள்ள டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவத்தினர் மற்றும் ஈரோடு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானவரித்துறையினர் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் தற்போது மீண்டும் அமலாக்கத் துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.