செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற ஐகோர்ட்டு அனுமதி
1 min read
Court allows transfer of Senthil Balaji to Kaveri Hospital
15.6.2023
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செந்தில் பாலாஜி
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளார். இதனிடையே சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வழக்கின் பின்னணி, கைதுக்கான காரணம், கைது நேரம் உள்ளிட்டவை குறித்து நீதிபதிகள் விசாரித்தனர்.
இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், அவரது மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும் மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், சிகிச்சையை அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம் என்று தெரிவித்துள்ளனர்.