June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னை-நெல்லை ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்க ஏற்பாடுகள் தீவிரம்

1 min read

Chennai-Nellai ‘Vande Bharat’ train running arrangements in full swing

16.6.2023
சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்படும் பகுதியில் வந்தே பாரத் ரெயில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வந்தேபாரத்

தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையாக சென்னையில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந் தேதி தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இயக்கப்படும் வகையில் சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயிலுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையில் இருந்து 5 மணி நேரம் 50 நிமிடத்தில் கோவையை சென்றடைவதால் வந்தே பாரத் ரெயில் சேவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரை வரை வந்தே பாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் முழுமை அடைந்துள்ளது.

நெல்லை

ஆனாலும் தென் மாவட்டங்களில் அதிக வருவாய் கொடுக்கும் ரெயில் நிலையமான நெல்லை வரைக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் நல சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய இணை மந்திரி முருகன் இந்த வருடத்திற்குள் சென்னையில் இருந்து நெல்லை வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நிறுத்துவதற்கான பிட்லைன் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்படும் பகுதியில் வந்தே பாரத் ரெயில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்மயமாக்கல்

வந்தே பாரத் ரெயிலை பொறுத்தவரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முழுமையான மின் இணைப்புகள் இருந்தால் மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும். இதனால் பிட்லைனில் மின் மயமாக்கல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இதற்காக அங்கு டிரான்ஸ்பார்ம்கள் உள்ளிட்ட கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தளவாட பொருட்கள் கொண்டு வரப்பட்டு அதற்கான பணிகளில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே சென்னை- நெல்லை இடையே மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவிரைவு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கு சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது.
கோவைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுகிறது. எனவே சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுமா? அல்லது மாலை, இரவு நேரங்களில் இயக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தற்போது இயக்கப்பட்டு இயக்கபடும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்ல பயண நேரம் 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் பயண நேரம் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் கூறியதாவது:-
பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே மூலம் விரைவில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க உள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில்கள் இயக்கப்படுவதால் அதே தண்டவாளங்களில் வந்தே பாரத் ரெயிலை இயக்கலாம். அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. அதே நேரத்தில் நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் வந்து சேர்ந்தவுடன் அதில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது சந்திப்பு ரெயில் நிலையத்தில் மற்ற ரெயில்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பிட்லைனில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ரெயிலை பொருத்தமட்டில் முழுமையான மின் இணைப்பு இருந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே வந்தே பாரத் ரெயில் பெட்டிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் ரெயில் நிலையத்தில் உள்ள பிட்லைனில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.