குற்றாலம் அருகே மான் மீது பைக் மோதல் – பெண் பலி
1 min read
Bike collides with deer near Courtalam – woman killed
19.6.2023
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே மான் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்து
நெல்லை மாவட்டம், அம்பை அருகே பள்ளக்கால் புதுக்குடி தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவருடைய மனைவி சுடலி (வயது 50). இவர் கடந்த 12-ந் தேதி தனது மகன் சிவன் பாண்டியுடன் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் இரவில் பைக்கில் புறப்பட்டனர். பைக்கை சிவன் பாண்டி ஓட்டிச் சென்றார்.
பழைய குற்றாலம் செல்லும் மெயின் ரோட்டில் சென்றபோது, ஒரு மான் திடீரென்று சாலையின் குறுக்காக வேகமாக பாய்ந்து ஓடியது. அதன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் சுடலி, சிவன் பாண்டி ஆகிய 2 பேரும் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தனர்.
சாவு
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுடலி சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுடலி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்