தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொட்டல்புதூர் தம்பதி தீக்குளிக்க முயற்சி
1 min read
Husband and wife tried to set themselves on fire in front of Tenkasi District Collectorate
19.6.2023
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி இவரது மனைவி நாகூர் ஆசியான் (மாற்றுதிறனாளி) இவர்கள் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் ஆவார்கள்.இவர்கள் இருவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று மனு கொடுக்க வந்திருந்தனர்.
அப்பொழுது, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவாயிலில் வைத்து முத்துச்சாமி தனது தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தென்காசி காவல் ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் மற்றும் காவலர்கள் ஓடி வந்து அவரது தலையில் தண்ணீரை ஊற்றி அவர்களை அங்கிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் கே எஸ் பாலமுருகன் அவர்களிடம் விசாரணை நடத்திய போது
முத்துசாமி தனக்கு தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த உடையார் என்பவரது மகனான ஆதிமூலம் என்பவர் ஆக்கிரமித்து உள்ளதாதவும் இதுபற்றி அவரிடம் பேசிய போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், கூறினார்.
மேலும் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவை ஆதிமூலம் தனது பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் சில அதிகாரிகள் மூலம் ரத்து செய்ததோடு இதுபற்றி அவரிடம் கேட்டால் தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறினார்.
மேலும், இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தாங்கள் தற்போது தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக அழுதபடி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர்களை சமாதானப் படுத்திய காவல்
ஆய்வாளர் பாலமுருகன் காவலர்கள் அவரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அழைத்துச் சென்று அவர்களது கோரிக்கை மனுவை அளிக்க வைத்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து அந்த தம்பதியினர் மன நிம்மதியுடன் வீடு திரும்பினார்கள்.