June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை

1 min read

D.I.G. Vijayakumar suicide

7.7.2023
டி.ஐ.ஜி. விஜயகுமார் ஐ.பி.எஸ். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜயகுமார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டிஐஜி விஜயகுமார்

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
அதேபோல சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் நேற்று இரவு தன்னுடைய பாதுகாப்புக்காக இருக்கும் துப்பாக்கி ஏந்திய காவலரிடம், ‘உங்களுடைய துப்பாக்கிகளை எங்கு வைப்பீர்கள்’ என்பது குறித்து கேட்டு அறிந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 6.45 மணிக்கு தன்னுடைய கன்மேனை பால் பாக்கெட் வாங்கி வரச் சொல்லி அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து கன்மேன், தனது துப்பாக்கியை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அப்போது, துப்பாக்கி வைத்திருந்த அறைக்கு சென்ற டி.ஐ.ஜி. அந்தத் துப்பாக்கியைக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலைக்கான காரணம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்று முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயகுமார் பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே, விஜயகுமார் ஐ.பி.எஸ். தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்ன ணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்து கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-

போலீஸ் அதிகாரி விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை. அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். காவல்துறை அதிகாரி விஜயகுமாரின் தற்கொலையை அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன? என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க பாமக. சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.