உழவர் சந்தைகளில் தக்காளி நியாய விலையில் கிடைக்க நடவடிக்கை-தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
1 min read
Measures to make tomatoes available at fair prices in farmers markets- Tenkasi District Collector Notification
10.7.2023
ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. தென்காசி, சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்தினை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தக்காளி விலை
தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை பொது சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நியாய விலையில் தக்காளி கிடைக்கும் வகையிலும், தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு இடைத்தரகர் இன்றி நியாயமான விலை கிடைக்கும் வகையிலும் உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனையை அதிகப்படுத்தி விலையை கண்காணிக்க தென்காசி மாவட்ட கலெக்டர் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி மற்றும் சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்தினை அதிகப்படுத்தவும், நியாயமான விலையில் தக்காளி கிடைக்கவும் அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினரோடு இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உன்னத திட்டமான உழவர் சந்தைகளை தக்காளி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தென்காசி, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.