மதுரையில் உருவான பிரமாண்ட நூலகம்-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min read
The grand library at Madurai was inaugurated by Chief Minister M. K. Stalin
15.7.2023
மதுரையில் உருவான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி, டி.ஆர்.பாலு எம்.பி., உள்ளிட்டோர் பங்றே்றுள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது கல்வியும், சுகாதாரமும் தான். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு சென்னை மருத்துவமனையும், மதுரை நூலகமும் சான்று.
சென்னை தமிழகத்தின் தலைநகர் என்றால், மதுரை தமிழகத்தின் கலை நகர். கண்ணகி எரித்த மதுரையில் அறிவு தீ பரவ போகிறது. திமுக என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கமும் ஆகும். கலைஞர் நூலகத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், அரசு பள்ளியில் படித்தவர்தான். குழந்தைகள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைந்துள்ளது.
அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மாணவர் பருவத்திலேயே தமிழ் சமூகத்திற்காக போராடியவர் கருணாநிதி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே ஒரு நூலகம் தான்.
தமிழ் இன்றும் தனித்து இயங்க காரணம், மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம். படிப்பு ஒன்றே மாணவர்களுக்கு நோக்கமாக இருக்க வேண்டும். படிப்பு மட்டும் தான் யாராலும் திருட முடியாத ஒரே சொத்து.
ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி தான் முக்கியம். காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி. தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்கள் நம்மை பின்பற்றும் வகையில் மகத்தான திட்டங்களை வழங்கி வருகிறோம். இந்தியாவின் முதன்மை மாநில தமிழகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நூலகத்தின் சிறப்பு
கலைஞர் நூற்றாண்டு நூலகம் 2,13,338 சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் ரூ.215 கோடி செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது. மதுரையின் மற்றொரு அடையாளமாக இது திகழ்கிறது.
இந்த நூலகமானது முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி, நகரும் படிக்கட்டுகள், லிஃப்ட் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் அமைந்திருக்கிறது. சுமார் 6 லட்சம் புத்தகங்கள் வைக்கும் திறன் கொண்ட இந்த நூலகத்தில் தற்போது, முதல் கட்டமாக தமிழில் 1.20 லட்சம் புத்தகங்களும், ஆங்கிலத்தில் 1.30 லட்சம் புத்தகங்களுமாக மொத்தம் 3.5 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் பிரிவு, பார்வையற்றோருக்கான பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பிரிவு, சிறுவர் அறிவியல் பூங்கா, போட்டித் தேர்வு புத்தகங்கள் பகுதி, மாநாட்டு கூடங்கள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக ஒவ்வொரு தளத்திலும் தனியாக கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்ள 3.5 லட்சம் புத்தகங்கள் தென் மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.