ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை மாணவ-மாணவிகள் திறந்தனர்
1 min read
The students opened the statue of Kamaraj in Alankulam
16.7.2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜருக்கு புதிய வெண்கலச் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாணவ-மாணவிகள் அந்த சிலையை திறந்தனர்.
காமராஜர்
தென்காசி – திருநெல்வேலி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிர்புறம் இருந்த காமராஜர் சிலை அகற்றப்பட்ட நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு கீழ் வரும் புதிய சிலையை அமைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கீடு செய்தது. அந்த இடத்தில் புதிய வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் ராமசுப்பு தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் காமராஜ், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜான் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர் சாலமோன் ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு சிறப்பு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மூத்த வழக்கறிஞர் பாலகணேசன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி. எழில்வாணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் வைகுண்ட ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் திறந்தனர்
காமராஜரின் புதிய வெண்கல சிலையை ஆலங்குளம் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் திறந்து வைத்தனர். பின்னர் ஆலங்குளம் காமராஜர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆலங்குளம் மார்க்கெட்டில் அமைந்துள்ள அரசரடி விநாயகர் கோவிலில் இருந்து 121 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காமராஜர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
முளைப்பாரி
மேலும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கரகாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் தப்பாட்டம் மற்றும் மேளதாளத்துடன் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமையில் 121 பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரிகள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைய நிதி உதவி வழங்கிய ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதி தொழில் அதிபர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில் பெருந் தலைவர் காமராஜர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு கமிட்டி பொருளாளர் பர்வீன் ராஜ், தொழிலதிபர் மணிகண்டன், வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், நகர ஓட்டல் அதிபர் சங்க தலைவர் உதயராஜ், உட்பட பலன் கலந்து கொண்டனர் முடிவில் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் அனைவருக்கும் நன்றி கூறினார். இரவில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.