தமிழகத்தில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
1 min read
Increase in power generation in wind farms in Tamil Nadu
20.7.2023
தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது.
காற்றாலை
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி ஆடி மாதம் தொடங்கியது. ஆடி தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள காற்றாலைகளில் தற்போது மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 106 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. அங்கு மின் உற்பத்தி அதிகரித்துள்ளால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. இதனால் காற்றின் வேகம் சற்று குறைந்து உள்ளது. இருந்தபோதிலும் நாட்கள் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று காற்றாலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்தவரும், இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கஸ்தூரி ரங்கன் கூறியதாவது:- காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காற்றாலைகள் மூலம் முறையே 12 ஆயிரம் மில்லியன் யூனிட் வீதம் ஒட்டுமொத்தமாக 24 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் இதனை அரசு போதிய அளவில் கொள்முதல் செய்வது இல்லை. அனல் மின்நிலையங்கள் மூலம் போதியஅளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது. எனவே அரசாங்கம் காற்றாலை மின்சாரத்தை கண்டுகொள்வது இல்லை. மத்திய மாநில அரசுகள் காற்றாலைகள் தயாரிக்கும் மின்சாரத்தை போதிய அளவில் கொள்முதல் செய்ய வேண்டும், எங்களுக்கான சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும், பழைய காற்றாலைகளின் இயக்கத்துக்கு தடை விதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.