வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
Successors can serve many generations if they think – Chief Minister M. K. Stalin’s speech
20.7.2023
வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கல்வி
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக எம்.ஐ.டி. விளங்குகிறது. ஏபிஜே அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட உங்களுக்கு வேறு பெருமை தேவையில்லை. படிப்பவர்கள் அனைவரையும் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக எம்.ஐ.டி. வளர்த்தெடுக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாணவர்கள் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் நான் முதல்வன் திட்டம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது அறிவாற்றலில் முதல் இடத்தை பெற வேண்டும். தமிழ்நாடு அரசின் சமூக நலத்திட்டங்களின் அனைத்து பயனையும் எம்.ஐ.டி. மாணவர்கள் பெற்று வருகின்றனர். அதிநவீன உள்விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் கட்டுவதற்கு ரூ.50 கோடியும், கற்றல்வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 1,000 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் அரங்கம் அமைக்கப்படும்.
வாரிசுகள்
நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும். வாரிசுகளால் தமிழ்நாட்டின் இளைய சக்தியானது அறிவாற்றல் பெற்றுள்ளது. கல்வி, சுகாதாரத்தில் சிறந்து விளங்குவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.