11 கைத்தறி ரகங்கள் விசைத் தறியில் உற்பத்தி செய்ய தடை
1 min read
Prohibition to produce 11 types of handlooms on power looms
23.7.2023
தென்காசி மாவட்டத்தில் 11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன். தெரிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப் பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் பின்வரும் 11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி, லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடை துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க், துண்டு மற்றும் அங்கவஸ்திரம் ஆகிய ரகங்களில் குறிப்பிட்ட தொழில் நுட்ப குறியீடுகளுடைய ரங்களை விசை தறியில் உற்பத்தி செய்ய கூடாது என்று சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டத்திற்கு புறம்பாக ஜவுளி இரகங்கள் மலிவு விலையில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை மேற்கொள்வதாக தெரிவித்து கைத்தறி நெசவாளர்கள் இதன் காரணமாக தங்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தவிர்க்கும் நோக்கில் தற்போது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ஐ அமல்படுத்தி வரும் கைத்தறி துறையால் தற்போது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது
மேற்படி பறக்கும் படைகள் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள் தனியார் ஜவுளி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் தீடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேற்படி ஆய்வு மேற்கொள்ளும் சமயத்தில் சட்டத்திற்கு புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுதல் அல்லது விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டறியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும்.
மேலும் தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்து வரும் கைத்தறி நெசவாளர்கள் தற்போது கண்ணுற்று வரும் இடர்பாடுகளை கலைத்திடும் வகையில், தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலைவாய்ப்பும் அதற்கான ஊதியமும் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சங்க உறுப்பினருக்கு மத்திய மாநில அரசுகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம், குடும்ப ஓய்வூதிய திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், இலவச வீடுகட்டும் திட்டம், இலவச மின்சார திட்டம், பிரதான் மந்திரி சர்வசிக்ஷா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா ஆகிய நலத்திட்டங்கள் பெற்று வழங்கிடவும் வழிவகை உள்ளது.
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற மதுரை மாவட்டம், 21ஃ9 கக்கன் தெரு செனாய் நகரில் இயங்கி வரும் உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தையோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (0452-2426116) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.