ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமக்கட்டியின் சிறப்புகள்
1 min read
Specialties of Namakati made in Zaderi village
1.7.2023
- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
நாமக்கட்டி
புரட்டாசி மாதம் என்றாலே அனைத்து இந்துமத வீடுகளிலும் ‘நாராயணா கோபாலா’ என்ற சத்தம் ஒலிக்கும். அன்றைய தினம் அனைவரது நெற்றிலும் திருநாமம் மிளிரும். சிறப்பு வாய்ந்த அந்த நாமக்கட்டிகள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ள ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படுகிறது.
இங்குள்ள 90 சதவீத குடும்பத்தினர் பல நூறுஆண்டுகளாக நாமக்கட்டி தயாரிப்பதை குடிசைத்தொழிலாக செய்து வருகின்றனர்.
நாமக்கட்டி தயாரிக்கும் வகையில் இயற்கையாகவே இந்த பகுதி வெண்பாறை நிறைந்த சுண்ணாம்பு மண்ணாக காணப்படுகிறது. இந்த வெண்பாறைகளை உடைத்து ஆலையில் இட்டு அரைத்து தொட்டியில் கரைத்து கீழே மென்மையாக படிந்திருக்கும் மாவினை பிரித்து நாமக்கட்டிகளை சிறு துண்டுகளாக்கி காய வைத்து பாக்கெட் செய்து விற்பனைக்காக தமிழகம் முழுவதும் அனுப்பிவைக்கின்றனர்.
மேலும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் நாமக்கட்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரபலமான நாமக் கட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஜடேரி கிராமத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் சிலர் 2019ல் ஜடேரி (திருமண்) நாமகட்டி தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை பதிவு செய்தனர். இச்சங்கத்தின் மூலம் ஜடேரி நாமக்கட்டிக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை மற்றும் அனுமதியோடு புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பித்தனர்.
இதனை மத்திய அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற நாமக்கட்டி தயாரிப்பதில்லை.
நாமக்கட்டி தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் பலநூறு ஆண்டுகளாக ஈடுபட்டுவருவதையும், நாமக்கட்டி தயாரிக்கும் மண் இப்பகுதியில் மட்டும் இருப்பதை உறுதி செய்தனர். பலக்கட்ட ஆய்வுக்கு பின் ஜடேரி நாமக்கட்டிக்கு மத்திய அரசு மூலம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி மற்றும் திமுக நிர்வாகிகள் ஜடேரி கிராமத்திற்கு நேரில் சென்று கிராம மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு இனிப்பும் வழங்கினர். அப்போது கிராம மக்கள் பல ஆண்டு கனவுகளை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்