மழை வேண்டி பெண்கள் தோரணமலைக்கு பாத யாத்திரை- கும்மியடித்து வழிபாடு
1 min read
Pilgrimage of women to Thoranamalai for rain – Kummiyadittu worship
11.8.2023
மழை வேண்டி பெண்கள் தோரணமலைக்கு பாத யாத்திரையாக சென்றனர். அங்கு கும்மியடித்து வழிபாடு நடத்தினர்.
தோரணமலை

தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இந்த கோவில் சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையதாகும்.அகத்தியரால் வழிபடப்பட்டு தேரையர் ஜீவ சமாதி கொண்டுள்ள புண்ணிய பூமியாக கருதப்படுகிறது
இக்கோவிலுக்கு ஒவவொரு பண்டிகையின் போதும் பக்தர்கள் அதிக அளவில் குவிகிறார்கள். அதன்படி ஆடி பெருக்கு அன்றும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்தனர். அன்றைய தினம் அகன்ற படிக்கட்டு திறந்து மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வழக்கமாக தமிழ்மாத கடைசி வெள்ளி அன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இன்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் கூட்டம்மிக அதிக அளவில் வந்திருந்தனர்.
பாதயாத்திரை
சமீபத்தில் பருவமழை பொய்த்து விட்ட நிலையில் மழை செழித்து பெயரும் விவசாயம் மேம்படவும் வேண்டி கடையம் மற்றும் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாதயாத்திரையாக தோரண மலைக்கு நடந்து வந்து மழை செழித்து பெய்ய வேண்டிய கும்மி அடித்து மற்றும் மழை வேண்டி மந்திரம் கூறி வழிபாடு நடத்தினர்.
அதேபோல் கடைசி வெள்ளியை முன்னிட்டு வழக்கம்போல் நடைபெறும் வருண கலச பூஜையும் நடைபெற்றது. 21 கரக குடத்தில் மலை மீது இருந்த சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அடிவாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
காலை முதல் மதியம் வரை வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.