புளியங்குடி அருகே 6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை தந்தை கைது
1 min read
Father arrested for murdering his 6-year-old son by pushing him into a well near Puliangudi
23.8.2023
புளியங்குடி அருகே 6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கொலை
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தென்மலை செல்லிபட்டிணம் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா என்பவரது மகன் முனியாண்டி (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி கார்த்தீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. முனியாண்டிக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை முனியாண்டிக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் மதுபோதையில் முனியாண்டி தனது இளைய மகன் மகிழன் (வயது 6) படிக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளியில் இருந்த மகிழனை தன்னுடன் வந்தால் மிட்டாய் வாங்கித் தருவதாக முனியாண்டி கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பி மகிழன் தனது தந்தையுடன் மொபட்டில் பள்ளியில் இருந்து புறப்பட்டுள்ளான். ஆனால் அதன் பின்னர் மகிழன் பள்ளிக்கோ, வீட்டிற்கோ திரும்பவில்லை.
மாலை வரை வீட்டிற்கு மகன் வராததை கண்ட கார்த்தீஸ்வரி சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி, உதவி ஆய்வாளர்கள் பள்ளி சிறுவனை காணவில்லை என வழக்கு பதிவு செய்து அவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் முனியாண்டி நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முனியாண்டி புளியங்குடிக்கு தனது மகன் மகிழனை அழைத்துச் சென்றதாகவும், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி விட்டு அருகே இருந்த நாணயம் என்பவரது தோப்பிற்கு சென்று மது அருந்தியதாகவும், தோப்பில் உள்ள கிணற்றில் மகிழனை வீசி கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
கைது
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிணற்றில் தேடிய போது சிறுவன் மகிழன் உடல் கிடைத்தது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து 6 வயது சிறுவனை கிணற்றில் வீசி கொலை செய்த அவனது தந்தை முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இத்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.