தென்காசி-நெல்லை 4வழிச் சாலை பணிகள் தாமதம் ஏன்?
1 min read
Why the delay in Tenkasi-Nellai 4 lane road works?
1.9.2023
தென்காசி – நெல்லை 4 வழிச்சாலை பணிகளில் தாமதம் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிக்கான வரைபட ஒப்புதலை ரயில்வே துறை இன்னும் வழங்கவில்லை ரயில்வேத்துறை, நெடுஞ்சாலைத்துறை இடையே சரிவர ஒருங்கிணைப்பு இல்லை என பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணியின் வரைபட ஒப்புதலை ரயில்வே துறை இன்னும் வழங்காதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை திட்ட மானது 430.71 கோடிகள் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப் படுகிறது.
போக்குவரத்து அதிகம் நெருக்கடி கொண்ட பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் மேம்பால பணிகள் தொடங்கி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.இந்த மேம்பாலம் 900 மீ நீளமும் 20 மீ அகலமும் கொண்டது. இடது புறம் 22 பில்லர்களும், வலது புறம் 22 பில்லர்களும் சேர்ந்து மொத்தம் 44 பில்லர்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
தற்போது நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது புற பகுதியில், போக்குவரத்து தடை படாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் தண்டவாளத்திற்கு கிழக்கு பகுதியில் 13 பில்லர்களும், மேற்கு பகுதியில் 9 பில்லர்களும் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தென்காசி செல்லும் இடது பக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமையாக தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.
தூண்களுக்கான அடித்தளம் அமைத்து, வட்ட வடிவிலான பில்லர் கான்கிரீட் மீது பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன.
பொதுவாக தண்டவாளத் திற்கு மேலே அமைய இருக்கும் பால பகுதிகளை ரயில்வே துறை செய்து வந்த நிலையில் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையே செய்து வருகிறது.
குறும்பலாபேரியைச் சார்ந்த ராஜசேகரபாண்டியன் என்பவருக்கு நெடுஞ்சாலை துறை அளித்த பதிலில், “பாவூர்சத்திரத்தில் அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலத்தின் ரயில்வே பகுதிக்கான வரைபடம், மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ரயில்வே பகுதியில் வேலை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜசேகர பாண்டியன் கூறுகையில், ரயில்வே துறையின் அலட்சியம் காரணமாக பல்வேறு இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் தண்டவாளத்திற்கு மேற்பகுதியில் அந்தரத்தில் தொங்குகின்றன. பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தை பொறுத்தவரை ரயில்வே துறைக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. தற்போது ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ரயில்வே கேட் அதிக தடவை மூடப்படுவதோடு, வாகனங்கள் இருபுறமும் கிலோமீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், சென்னையில் உள்ள ரயில்வே முதன்மை பால பொறியாளரிடம், மதுரை ரயில்வே கோட்ட பொறியாளரிடமும் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால வரைபட அனுமதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் வரைபடங்களை வழங்காமலும் போதிய கால அவகாசம் தராததாலும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாங்கள் கேட்கும் கூடுதல் தகவல்களையும் உடனடியாக வழங்கினால் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்றனர். எனவே தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக ரயில்வே துறைக்கு பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால வரைபடம் சம்பந்தமான போதுமான தகவல்களையும் கொடுத்து குறித்த நேரத்தில் ஒருங்கிணைப்பு செய்து பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.