அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
1 min read
AIADMK ex-MLA Sathyanarayanan’s house raided by anti-corruption department
13.9.2023
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன்
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து சென்னை, கோவையில் உள்ள அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சத்தியநாராயணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.
சத்தியநாராயணன் கடந்த 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் தி.நகர் தொகுதி எம்எல்ஏ,,வாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்துக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று காலை தொடங்கி சென்னை, கோவை, திருவள்ளூர் என அவருக்குத் தொடர்புடைய 16-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக நிர்வாகிகள் சிலரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுகவினர் எதிர்ப்பு
இந்நிலையில், சத்தியநாராயணன் வீடு அமைந்துள்ள பகுதியில் அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர். அங்கே தொடர்ந்து அதிமுகவினர் குவிந்து வருகின்றனர். சாலை மறியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.