அமெரிக்காவில் ஆந்திர மாணவி விபத்தில் இறந்ததை கிண்டல் செய்த போலீஸ் அதிகாரிகள்-இந்தியா கண்டனம்
1 min read
India condemns police officers for teasing over Andhra girl’s death in US accident
14.9.2023
அமெரிக்காவில் ஆந்திர மாணவி விபத்தில் இறந்ததை பற்றி கிண்டல் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தியுள்ளார்.
மாணவி
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜானவி கண்டூலா (வயது 23). இவர் அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம் சியாட்டி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்பு தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் சவுத் லேக் யூனியன் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் மாணவி ஜானவி கண்டூலா மீது பயங்கரமாக மோதியது.
இதில் 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த காரை போலீஸ் அதிகாரி கெவின் டேவ் என்பவர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி வந்ததாக அவருடன் பயணித்த மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆடரர் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்ததும் அவர் உயர் அதிகாரி மைக்கோலன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
விபத்து நடந்தது குறித்து எடுத்துக்கூறிய டேனியல் ஆடரர் விபத்தில் இறந்தது வழக்கமான பெண்தான் 11ஆயிரம் டாலர் காசோலையை தயார் செய்து வையுங்கள். அவருக்கு 26 வயது தான் இருக்கும், எனவே பெரிய மதிப்பு இல்லை என்று சொல்லி விட்டு பலத்த சத்தத்துடன் சிரிக்கிறார். மைக்கோலனும் கேலி செய்து சிரிக்கிறார்.
இந்த பேச்சுகள் அனைத்தும் போலீஸ் அதிகாரியின் சீருடையில் பொருத்தபட்டு இருந்த கேமராவில் (பாடிகேம்) வீடியோவாக பதிவாகி இருந்தது.
கண்டனம்
விபத்தில் இறந்த இந்திய வம்சாவளி மாணவியை பற்றி 2 போலீஸ் அதிகாரிகளும் கேலி, கிண்டல் செய்யும் வீடியோவினை தற்போது போலீசார் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் ஜானவி கண்டூலா மரணம் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த மோசமான வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சியாட்டிலில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளது. மேலும் வாஷிங்டனில் உள்ள மூத்த அதிகாரிகளிடமும் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருப்பதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்து உள்ளது.