“சனாதனம்” பற்றி சென்னை ஐகோர்ட்டு பரப்பரப்பு அறிவிப்பு/கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிறரை காயப்படுத்தக்கூடாது
1 min read
Madras High Court Propaganda Notice about “Sanathanam”/not to hurt others in the name of freedom of opinion
16.9.2023
“சனாதனம்” பற்றி சென்னை ஐகோர்ட்டு பரப்பரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிறரை காயப்படுத்தக்கூடாது என்று நீதிபதி என்.சேஷசாயி தெரிவித்தார்.
சனாதனம் சுற்றறிக்கை
அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில், சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி சேஷசாயி கூறியதாவது:-
இந்துக்களின் கடமை
சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு.
இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா. குடிமகன் நாட்டை நேசிக்கக் கூடாதா? நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா?
சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.
மத பழக்க வழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம். அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்.
தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ – மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.