கேரளாவின் ஓணம் லாட்டரியில் திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு ரூ.25 கோடி பரிசு
1 min read
In Kerala’s Onam lottery, 4 people from Tirupur won Rs.25 crore
22.9.2023
கேரளாவின் ஓணம் லாட்டரியில் திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு ரூ.25 கோடி பரிசு கிடைத்துள்ளது.
லாட்டரி
கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலுக்காக 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதில் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தது.
இது கடந்த ஆண்டு ஓணம் பம்பர் விற்பனையை விட 9 லட்சம் அதிகமாகும். ஓணம் பம்பர் முதல் பரிசு ரூ.25 கோடியாகும். 2-ம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.50 லட்சம் வீதம் 20 பேருக்கும், இவை தவிர மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மொத்த பரிசு தொகை ரூ.125 கோடியே 54 லட்சம் ஆகும். இதில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் லாட்டரி பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஓணம் பம்பர் குலுக்கல் முடிவுகள் கடந்த புதன் கிழமை பிற்பகல் வெளியிடப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது. அந்த லாட்டரி எண் TE 230662 ஆகும். ஆனால் முதல் பரிசு ரூ.25 கோடி பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது.
திருப்பூர்
தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது. இந்தநிலையில் இன்று, திருப்பூரை சேர்ந்த நடராஜன் உள்பட 4 பேர் ஒன்றாக சேர்ந்து எடுத்த டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்த தகவல் தெரிய வந்தது. அதாவது அந்த டிக்கெட்டுடன் 4 பேரும் திருவனந்தபுரம் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு நேரில் வந்து பரிசு வினியோக பிரிவில் ஒப்படைத்தனர்.
பாலக்காட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு திருப்பூர் திரும்பும் வழியில் வாளையாரில் எடுத்த 3 டிக்கெட்டில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்ததாக அவர்கள் லாட்டரி அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.