தென்காசி, நெல்லை, குமரியை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க ரவிஅருணன் கோரிக்கை
1 min read
Ravi Arunan’s request to declare Tenkasi, Nellai, Kumari as Environmental Protection Zone
23.9.2023
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்ககளுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதிக்கவும், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களை சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே ரவி அருணன் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இருந்து குறிப்பாக குமரி நெல்லை தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதில் குறிப்பாக கேரளாவில் நடக்கும் கட்டுமான பணிகள் அனைத்தும் தமிழகத்திலி ருந்து கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை கொண்டே மேற்கொள்ளப்படுகிறது அதே சமயம் அந்த மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை காரணம் இயற்கை வள பாதுகாப்பு என்ற அவர்களின் உயரிய நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கனிம வள கொள்ளையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு. தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள் மூலம் கனிம வளங்களை கொண்டு செல்ல தடைவிதித்தது இதன் மூலம் கனிம வள கொள்ளை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு
இருக்கிறது. ஆனால் அதற்கும் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற முயற்சி
மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதே சமயம் இந்த தடை உத்தரவு தொடர்பான வழக்கில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன்
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ஒரு வாகனத்தின் மூலம் அதிகளவிலான கனிமங்களை கொண்டு செல்கின்றனர். இது சுற்றுச்சூழலை பாதிப்பது மட்டுமின்றி சாலைகளையும் பெரிதும் பாதிக்கிறது தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்தின் வேகம் மற்றும் எடை அளவை கட்டுப்படுத்தும் அதிகாரம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உண்டு என்று தமிழக அரசின் கருத்தை எடுத்துரைத்து தனது வாதத்திற்கு வலு சேர்த்திருக்கிறார் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கனிம வளங்களை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தடையேதும் இல்லை என்று சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அது சரிதான் என்ற போதிலும் நிலக்கரியை கருத்தில் கொண்டே அப்படி ஒரு அனுமதியை மத்திய அரசு வகுத்துள்ளது. எனவே நிலக்கரி தவிர பிற கனிமங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு ஒரு சட்டமுன் வடிவை கொண்டுவர வேண்டும்.
கேரளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது இதனால் அம்மாநிலத்தில் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தங்கள் மாநிலத்தை பாதுகாத்துக் கொண்டு பக்கத்து மாநிலத்தை பாழ்படுத்தும் கேரளாவிவின் நோக்கத்திற்கு நாம் ஏன் துணை போக வேண்டும்?
கேரளாவை போலவே தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தான் அமைந்துள்ளது இந்த பகுதிகளை ஏன் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கூடாது? நமது மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டாமா? மேலும் கனிம வளங்கள் அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுவதால் விவசாயமும் அடியோடு அழிவதுடன் அடுத்த தலைமுறைகளுக்கு இந்த கனிம வளங்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கும் சிறப்பு தீர்மானம் ஒன்றை தமிழக அரசு கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும். தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களையும் சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கே.ரவி அருணன் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.