நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நவதிருப்பதி தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
1 min read
Special buses run from Nellai New Bus Station to Navathirupathi destinations
23.9.2023
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த நாட்களில் பெருமாள் கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவு செல்வது வழக்கம். இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. நெல்லை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் இந்த பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெருமாள் கோவில்களுக்கு செல்ல 3 பஸ்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பஸ்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பின. ஒரு பஸ்சுக்கு 55 பக்தர்கள் வீதம் மொத்தம் 165 பக்தர்கள் இன்று கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த பயணத்திற்கு கட்டண தொகையாக ரூ.500 வசூலிக்கப்பட்டது. இந்த 3 பஸ்களும் காலை 7 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் சென்ற பக்தர்களுக்கு பிரசாத பை மற்றும் கோவில்கள் வரலாறு குறித்த விளக்க கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இதில் கோட்ட மேலாளர்கள் சசிகுமார், பூல்ராஜ், கோபால கிருஷ்ணன், சுப்பிரமணியன், சுடலைமணி, மாரியப்பன், தாமிரபரணி கிளை மேலாளர் கோபால கிருஷ்ணன், பைபாஸ் பணிமனை கிளை மேலாளர் விஜயகுமார், புதிய பஸ் நிலைய பொறுப்பாளர் முனியசாமி மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பஸ் நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்த லோசனார் பெருமாள் கோவில், தேவர் பிரான் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஆகிய 9 கோவில்களுக்கும் சென்று இரவு மீண்டும் புதிய பஸ் நிலையம் வந்தது.
தேபோல் வருகிற 30-ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 7-ந்தேதி, 14-ந்தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இனிவரும் வாரங்களில் செல்வதற்கு விருப்ப முள்ளவர்கள் புதிய பஸ் நிலையத்தில் கடந்த 14-ந்தேதி முதல் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.
இதேபோல் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து திருவேங்கட நாதபுரம், கருங்குளம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், வள்ளியூரில் இருந்து களக்காடு வழியாக திருக்குறுங்குடிக்கும், வீரவநல்லூரில் இருந்து அத்தாள நல்லூருக்கும் பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட்டன.