சென்னை-நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
1 min read
PM Modi inaugurated the ‘Vande Bharat’ train service between Chennai and Nellie
24.9.2023
சென்னை-நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத்
இந்திய ரெயில்வே துறை சார்பில் ரெயில் பயணத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, உலகத்தரத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயண தூரத்தை அதிவேகத்தில், கடப்பதால் இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் வந்தே பாரத் ரெயிலான சென்னை-கோவை ரெயிலை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
நெல்லை
தென் மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பயணிகள் கோரிக்கை வலுத்தது. அதன் அடிப்படையில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே துறை அனுமதி அளித்தது. அதற்கு ஏற்ப பிட்லைன், தண்டவாளங்கள் பலப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த 21-ந்தேதி இந்த ரெயில் சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. பிறகு மறுமார்க்கமாக சென்னையில் இருந்து இரவு நெல்லைக்கு வந்தடைந்தது.
தொடக்கவிழா
தொடர்ந்து நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கத்தின் தொடக்க விழா இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ரெயிலை காணொலி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அவர் மன் கீ பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மதியம் இந்த வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரெயிலுடன் விஜயவாடா-சென்னை சென்ட்ரல், பெங்களூரு (யஸ்வந்த்பூர்)-ஐதராபாத் (கச்சிகுடா), காசர்கோடு-திருவனந்தபுரம் (வழி ஆலப்புழா), பூரி-ரூர்கேலா, உதய்பூர்-ஜெய்ப்பூர், பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-அகமதாபாத் (சபர்மதி) ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தொடக்க விழாவையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து வந்தே பாரத் ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பத்மநாபன் அனந்த், சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதல் நாளான இன்று பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பிரதமர் பேசுகின்ற மன் கீ பாத் நிகழ்ச்சியை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைத்து கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் கலந்து கொண்டார்.
இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்திருந்தனர். நெல்லை சந்திப்பில் இருந்து தற்போது ரெயில் புறப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வரை ரெயிலில் பயணம் செய்தார். இதேபோல மத்திய மந்திரி எல்.முருகன் திருச்சி வரை பயணம் செய்தார். தொடர்ந்து இந்த ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சில நிமிடங்கள் நின்று சென்றது. அந்தந்த ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் இந்த ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திங்கட்கிழமை
இந்த ரெயிலில் வழக்கமான சேவையானது நாளை (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு தொடங்குகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வந்தே பாரத் ரெயில் பராமரிப்பு பணிக்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, நெல்லையில் இருந்து வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. இந்த பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த சனிக்கிழமையே தொடங்கி விட்டது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் இந்த ரெயிலின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பின.
நாளை சென்னையில் இருந்து பயணிக்க மட்டும் குறைந்த அளவு இருக்கைகள் இருந்தன.
கட்டண விவரம்
இந்த ரெயிலில் சாதாரண ஏ.சி. பெட்டிகளில் உணவுடன் சேர்த்து பயணிக்க ரூ.1,620 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டிகளில் ரூ.3,005 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பயணிகளுக்கு காலையில் டீ, காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ரெயிலில் டீ, ஸ்நாக்ஸ், இரவு உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. உணவு தேவை இல்லை என்றால் டிக்கெட் எடுக்கும்போதே அதனை தவிர்க்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 652 கிலோமீட்டர் தூரத்தை 110 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து 7 மணி நேரம் 50 நிமிடத்திற்குள் அடைந்துவிடும் வகையில் இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னகத்தில் அதிக வருவாயை அள்ளிக்கொடுக்கும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரெயிலில் 1 வி.ஐ.பி. பெட்டி மற்றும் 7 சாதாரண பெட்டிகள் உள்ளன. வி.ஜ.பி. பெட்டியில் 52 இருக்கைகள் உள்ளன. மற்ற பெட்டிகளில் தலா 76 இருக்கைகள் உள்ளன. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பெட்டிகளில் சார்ஜர் வசதி, சாப்பிட தேவையான வசதி, நவீன கழிப்பிட வசதி, வை-பை வசதி, சுழலும் இருக்கைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல் இந்த ரெயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளில் மற்ற ரெயில்களை விட கூடுதலாக சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் தங்களது கை குழந்தைகளுடன் தனியாக பயணம் செய்யும் போது கழிப்பறைக்கு செல்லவேண்டி இருந்தால் குழந்தையை அங்கு கொண்டு சென்று உட்கார வைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த 8 பெட்டிகளிலும் பாதுகாப்புக்காக தலா 2 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசல் பகுதியிலும் தலா 2 சி.சி.டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளது. முற்றிலும் சென்சார் மயமாக்கப்பட்டுள்ளதால் ரெயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக வந்தால் மட்டுமே ரெயிலில் ஏற முடியும். மற்ற ரெயில்களை போல ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய முடியாது. அவ்வாறு படிக்கட்டில் நின்றால் ரெயில் அங்கிருந்து நகராத வகையில் இந்த ரெயில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் உள்ளே சென்ற பின்னர் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும். அதன்பின்னரே ரெயில் புறப்பட முடியும்.