June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

”இந்தியா உடனான உறவு முக்கியமானது” கனடா பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர்

1 min read

“Relationship with India is important,” said Canadian Defense Minister Bill Blair

25/9/2023
இந்தியா உடனான உறவு கனடாவுக்கு மிகவும் முக்கியம் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் தீவிரவாதி

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(வயது 45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ல் இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா அறிவித்தது.

விசா நிறுத்தம்

இதற்குப் பதிலடி கொடுக்கு்ம் விதமாக இந்தியாவில் உள்ள கனடா தூதரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. மேலும், கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய விசா வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவு இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

‘கனடாவுக்கு முக்கியம்’

இந்நிலையில், இந்தியாவின் உறவு கனடாவுக்கு முக்கியம் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியா உடனான உறவு கனடாவுக்கு மிகவும் முக்கியம். தற்போதுள்ள சூழலை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்தியா உடனான உறவை கனடா மிகவும் மதிக்கிறது. இது ஒரு சவாலான விஷயம். எங்கள் சட்டத்தை, குடிமக்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிவதற்கும் எங்களுக்கு பொறுப்பு உள்ளது.

இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கனடா அரசின் நிலை என்னவாக இருக்கும் எனக் கேட்கிறீர்கள். கனடாவின் மண்ணில் கனடாவின் குடிமகன் ஒருவரைக் கொல்வது என்பது கனடாவின் இறையாண்மையை மீறும் செயல் என்பதால் அது கவலை தரக்கூடியதாகவே இருக்கும். இந்தோ-பசிபிக் வியூகம் கனடாவுக்கு மிக மிக முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார். குளோபல் நியூஸ் இதனை தெரிவித்துள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவத்தின் இருப்பை அதிகரிக்கவும், ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் இந்தோ-பசிபிக் ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கான நிதியாக 492.9 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை, கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளதால், அதனைக் குறைக்கும்படி இந்தியா கேட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.