நீட் கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
A case where the NEET cut-off score is reduced to zero; Delhi High Court directs Central Government to respond
27.9.2023
நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பூஜ்ஜியம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட்-ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக எடுத்திருந்தாலும் எம்.டி.எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு கடந்த 20-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.
ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மனு
இந்நிலையில் இந்த அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே முதுநிலை நீட் தேர்வு எழுதிய 3 மருத்துவ மாணவர்கள் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக நீட் முதுநிலை தேர்வின் நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ், இந்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய தேர்வுகள் வாரியம் மற்றும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டிக்கு உத்தரவிட்டார்.