நாளை மறுநாள் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
1 min read
Cauvery Management Commission meeting the day after tomorrow
27.9.2023
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
காவிரி மேலாண்மை
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என்று, தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நாளை மறுநாள் (29-ம் தேதி) காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார். நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடக அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்து கூறுவார்கள். மேலும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.