நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தோல்வி அடைந்தால் அந்த மாவட்டச் செயலாளர் நீக்கம்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
1 min readIf the candidate fails in the parliamentary elections, the district secretary will be removed – M. K. Stalin’s warning
1.10.2023
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
40 தொகுதிகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம்தான் உள்ளது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இதற்காக தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் சரி பார்க்க வேண்டும்.
விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றதை விட இந்த நாடாளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள். தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் தவறாது பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். வருகிற தேர்தலில் கழகத்தின் வெற்றியே முக்கியம் என்கின்ற வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் அந்த மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். தொகுதிப் பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.