தோரணமலைக்கு அரசு பஸ் விட எம்.எல்.ஏ.விடம் செண்பகராமன் கோரிக்கை
1 min read
Senpakaraman requests MLA to send government bus to Thoranamalai
1.10.2023
தோரணமலைக்கு அரசு பஸ்விட ஏற்பாடு செய்யும்படி பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் கோரிக்கை மனு கொடுத்தார்.
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அகத்தியர், தேரைவர் வாசம் செய்த ஸ்தலம் என்ற பெருமை இக்குகோவிலுக்கு உண்டு. இங்கு தினமும் பக்தர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தமிழ்மாத கடைசி வெள்ளி, பவுர்ணமி கிரிவலம் மற்றும் விழாக்காலங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.
இக்கோவிலில் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஞாயிற்று, கடைசிவெள்ளி, பவுர்ணமி நாளில் காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. மாலை 3 மணி வரை மலையே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கோவிலுக்கு இரு சக்கர வாகனம் மற்றம் கார்களில்தான் பக்தர்கள் வருகிறார்கள். சாதாரண மக்கள் மற்றும் வெளியூர் மக்கள் தென்காசி-கடையம் சாலையில் இறங்கி அதன்பின் ஆட்டோவில்தான் கோவிலுக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் நடந்தே கோவிலுக்கு வருகிறார்கள்.
பஸ்விட கோரிக்கை
எனவே கோவிலுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன், பி.எச்.மனோஜ்பாண்டியனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடையம்-தென்காசி சாலையில் தோரணமலை விலக்கில் இருந்து 3 கிலோமீட்டர் தொலையில் தோரணமலை முருகன் கோவில் உள்ளது. புராணம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலான இங்கு தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் உள்பட பல ஊர்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் வந்து செல்வதற்கு பஸ்வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே தோரணமலைக்கு அரசு பஸ் இயக்க ஆவன செய்ய பக்தர்கள் சார்பில் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.