கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலை பரபரப்பு பேச்சு
1 min read
Annamalai sensational talk about alliance breakup
5.10.2023
கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் இதுபற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
பாஜக நிர்வாகிகள் கூட்டம்
சென்னையில் நடைபெற்ற பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
அடுத்த 7 மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக, பாஜக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும். பெண்கள் சென்று வாக்கு சேகரிக்கும்போது கண்டிப்பாக வாக்காளர்கள் வாக்கை மாற்றி போடமாட்டார்கள். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களை அழைத்து பேச வேண்டும்.
அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது; தீவிரமாக உழைக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒன்றரை கோடி மகளிருக்கு வழங்கும் வகையில் விரிவுபடுத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்த வேண்டும்.
கூட்டணி
கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்; அது அவர்களின் விருப்பம்; அதைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக கூறிவிட்டேன்.
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; வாக்கு சதவிகிதம் உயரும் பாஜகவை வலிமையடைய செய்வதே என்னுடைய நோக்கம்.
‘என் மண் என் மக்கள்’ நடைபயண நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்