லஞ்சப்பணத்துடன் புளியரை மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் கைது
1 min read
Puliarai motor vehicle inspector arrested with bribe
20.10.2023
தமிழ்நாடு கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பணி முடித்துச் சென்ற போக்குவரத்து துறை பெண் ஆய்வாளர் காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனைகள் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 2.76 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை சோதனை சாவடியில் அந்த வழியாக கேரளாவிற்கு செல்லும் வாகன டிரைவர்களிடம் கட்டாயப்படுத்தி லஞ்சப் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பால்சுதர் தலைமையில் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, உதவியாளர் உதவி ஆய்வாளர் ரவி, உள்ளிட்ட குழுவினர் நேற்று அதிகாலை முதல் தமிழ்நாடு கேரள எல்லையான புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி அருகே மாற்று உடையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தச் சோதனை சாவடிக்கு நேற்று இரவு பணிக்கு வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி வழக்கம் போல் பணிகளை முடித்துக் கொண்டு நேற்று காலை 8:30 மணிக்கு தனது கணவரான ஷாட்சன் உடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது செங்கோட்டை அடுத்த தவணை விளக்கு அருகே சென்ற போது காரை தடுத்து நிறுத்திய லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் காரில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி கையில் இருந்த பையில் ரூபாய் 2 லட்சத்து 76 ஆயிரத்து 400 ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்தப் பணம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரள மாநிலத்திற்கு செல்லும் கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், என பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பிரேமா ஞானகுமாரியை கைது செய்தனர்.
தமிழக கேரள எல்லையான புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடியில் பணி முடிந்து காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தடுத்து நிறுத்தி கட்டு கட்டாக லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.