விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன்கள்தென்காசி ஆட்சியர் தகவல்
1 min read
Interest free loans to farmers Tenkasi Collector Information
20.10.2023
தென்காசி மாவட்டத்தில் விவசாய கடனாக வட்டியில்லாத கடன்கள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கடன்
தென்காசி மாவட்டத்தில் தற்பொழுது பருவ மழை பெய்து வருவதை தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் செய்வதற்கு தேவைப்படும் வட்டியில்லாத பயிர் கடன்கள் மற்றும் உரம் ஆகியவற்றை தங்கள் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
கடன் பெறும் விவசாயிகள் கடனை ஓராண்டிற்குள் திரும்ப செலுத்தினால் அவர்கள் செலுத்த வேண்டிய வட்டி முழுவதும் அரசால் தள்ளுபடி செய்யப்படும். மேலும் இதுவரை பயிர் கடன் பெறாத புதிய விவசாயிகள் அனைவரும் தாங்கள் பயிர் செய்வதற்கான அனைத்து ஆவணங்களுடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம்.
தென்னை, மாமரம் மற்றும் எலுமிச்சை மரம் பராமரிப்பு கடன் வட்டியில்லாத கடனாக வழங்கப்படுகிறது. மேலும் கால்நடை பராமரிப்புக் கடனாக ஒரு கறவை மாட்டிற்கு ரூ.14000 வரை வட்டியில்லாத கடனாக வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழு கடன், நகைக் கடன் மற்றும் சிறு வணிகர்கள் கடன் போன்றவையும் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
மேலும் விவசாய தொழில்களான ஆழ்துளை கிணறு அமைத்தல், கறவை மாடுகள் வாங்குதல், ஆடு வளர்ப்பு போன்ற தேவைகளுக்கும் குறைந்த வட்டியில் மத்திய கால கடன்கள் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் தொழில் கடன் வழங்கப்படுகிறது.
விவசாயத்திற்கு தேவைப்படும் வேளாண்மை இயந்திர கருவிகளும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 87 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு துணைப்பதிவாளர் தென்காசி சரகம்:7338722105 / துணைப்பதிவாளர் சங்கரன்கோவில் சரகம்:8939300328 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.