சென்னையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பா.ஜ.க. மேலிடக் குழு சந்திப்பு
1 min read
BJP with Tamil Nadu Governor RN Ravi in Chennai. Executive Committee Meeting
28.10.2023
தமிழகத்தில் பா.ஜனதா வினர் மீது அரசியல் பழி வாங்கும் விதத்தில் தி.மு.க. அரசு செயல்படுவதாக பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.
சமீபத்தில் பனையூர் 6-வது அவென்யூவில் இருக்கும் அண்ணாமலை வீட்டின் அருகே கட்சி கொடியேற்றுவதற்காக 50 அடி உயர கொடிக்கம்பம் அமைத்து இருந்தனர்.
அந்த கொடிக்கம்பம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற வில்லை என்று அந்த பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அந்த கொடிக் கம்பத்தை அப்புறப்படுத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில் கட்சி தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி உள்பட கட்சி நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
பா.ஜனதாவுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் குறித்து அண்ணாமலை டெல்லி மேலிடத்துக்கு புகார் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்து வரும்படி 4 பேர் கொண்ட மேலிடக் குழுவை பா.ஜனதா தேசிய தலைமை நியமித்தது.
இந்த குழுவில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சதானந்த கவுடா, ஆந்திரா மாநில பா.ஜனதா தலைவர் புரந்தரேஸ்வரி, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும், எம்.பி.யுமான சத்ய பால் சிங், பெங்களூர் எம்.பி. மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
இந்த குழுவினர் நேற்று மாலையில் சென்னை வந்தார்கள்.
கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மேலிட குழுவினர் நிர்வாகிகளை சந்தித்தார்கள். மாலை 7 மணியளவில் தொடங்கிய இந்த சந்திப்பு நள்ளிரவு 12 மணிவரை நீடித்தது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தார்கள்.
கூட்டத்தில் 103 பேர் தங்கள் பகுதிகளில் தி.மு.க. வினரால் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறினார்கள். கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடுவதாகவும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் புனையப்படுவதாகவும் கூறினார்கள்.
சமூக வலைத்தளங்களில் வெளிவரும் தகவல்களை பகிர்ந்தாலும் வழக்கு போடுகிறார்கள். மேலும் அவ்வாறு வழக்கு போடு பவர்களையும் கோர்ட்டு விடுமுறையை மனதில் கொண்டு வெள்ளி, சனிக்கிழமை இரவுகளில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறார்கள்.
இதனால் வீடுகளில் இருக்கும் பெண்கள் பயப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்கள்.
அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், வீடியோ பதிவுகள் போட்டோக்கள் ஆகியவற்றினையும் குழுவினரிடம் வழங்கினார்கள்.
ஒரு அரசியல் கட்சி கொடியேற்ற கூட அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டு பனையூரில் பா.ஜனதா கொடிக்கம்பம் நடப்பட்ட இடத்தின் அருகிலேயே தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பங்கள் உள்ளன. அவற்றை அகற்றவில்லை என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்ட பிறகு சதானந்த கவுடா நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி அதிகமாக உள்ளன. அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்றார்.
இந்நிலையில் மோதல் நடைபெற்ற இடத்தை மேலிடக் குழுவினர் இன்று பார்வையிட்டனர். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்தார்கள்.
இன்று மதியம் பா.ஜனதா குழுவினர் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்கள்.
இந்த சந்திப்பின் போது மாநிலம் முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக புனையப்பட்டுள்ள வழக்கு விபரங்கள். அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் இணைத்து கொடுத்தார்கள். மேலும் தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தாலும் வழக்கு போடுவதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். தங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் வலியுறுத்தினார்கள்.