தீபாவளியை கொண்டாட அமெரிக்காவில் இருந்து நெல்லை வந்தவர்கள் விபத்தில் சிக்கினார்கள்
1 min read
People who came from America to celebrate Diwali met with an accident
14.11.2023
நெல்லை பெருமாள்புரம் என்.எச். காலனி 11-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 78). இவரது மனைவி உஷா. இவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நேற்று திருச்செந்தூருக்கு காரில் சென்ற நாகராஜன்-உஷா தம்பதி மாலையில் வீடு திரும்பினர்.
இவர்களது கார் ஆதிச்சநல்லூர் கால்வாய் பாலம் அருகே வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும் பிரேக் பிடிக்காததால் பாலத்தில் மோதிய கார் சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த நாகராஜன்-உஷா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த நாகராஜன்-உஷா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார். உஷா மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.