திருப்பூரில் லாரியும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் பலி
1 min read
5 people died in an accident involving a truck and a car in Tirupur
16.11.2023
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.
விசாரணையில் கோவையில் இருந்து பழனி கோவில் சென்று திரும்பியதும், மனக்கடவு பகுதியில் விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.
காரும், லாரியும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலா ரூ.2 லட்சம்
தாராபுரம் சாலை விபத்தில் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல் அமைச்சரின் அறிவிப்பு வருமாறு :-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமம், ஆலங்காட்டுப்பிரிவு என்ற இடத்தில் நேற்று (16.11.2023) மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வானமும் நேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தாராபுரத்தைச் சேர்ந்த திரு.பாலகிருஷ்ணன் (வயது 65), அவரது மனைவி திருமதி.செல்வி (வயது 50), கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், வஞ்சியம்மா நகரைச் சேர்ந்த திரு.தமிழ்மணி (வயது 50), அவரது மனைவி திருமதி.சித்ரா (வயது 45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த திருமதி.கலாராணி (வயது 55) என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் கூறி இருக்கிறார்.