புளியங்குடி ஜவுளிக்கடை ஊழியர் கொலையில் டிப்ளமோ என்ஜினீயர் கைது
1 min read
Diploma engineer arrested in Puliangudi garment shop employee murder
21.11.2023
தென்காசி மாவட்டம் புளியங்குடி சுள்ளக்கரை தெருவை சேர்ந்தவர் அய்யாக்குட்டி(வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கனகலெட்சுமி என்ற மனைவியும், ஆவுடைச்செல்வி என்ற மகளும் உள்ளனர்.
அய்யாக்குட்டியின் மகள் ஆவுடைச்செல்விக்கு நாளை மறுநாள்(வியாழக்கிழமை) திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக அவர் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அவரது மனைவி மற்றும் மகள் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் அய்யாக்குட்டியை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
இதையும் படியுங்கள்: காங்கயம் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.53 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை இதுகுறித்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பேண்ட், சர்ட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வருவதும், அய்யாக்குட்டியின் வீட்டுக்குள் சென்றுவிட்டு சில நிமிடங்களில் வெளியே அவசரமாக சென்று தப்பிச்செல்வதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், அய்யாக்குட்டியை குத்திக்கொலை செய்தது புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் செல்வமுருகன்(வயது 25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
செல்வமுருகன் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். பின்னர் அவரது தந்தையுடன் சேர்ந்து டைல்ஸ் ஒட்டும் தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்துள்ளது.
சமீபகாலமாக செல்வமுருகன், ஆவுடைச்செல்வியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபரம் ஆவுடைச்செல்விக்கே தெரியாத நிலையில், நாளை மறுநாள் அவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. இதனை அறிந்த செல்வமுருகன் சம்பவத்தன்று இரவு அதிக அளவு மது குடித்து விட்டு அய்யாக்குட்டியின் வீட்டுக்கு சென்று அவரை குத்திக்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து செல்வ முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.